வேளச்சேரி படங்கள்

ரொம்ப நாளைக்கு முன்னாடி தொலைந்து போன லென்ஸ் மூடியை நேற்றுதான் வாங்க முடிந்தது
வரும் வழியில் வேளச்சேரியில் எடுத்த சில படங்கள் சில பார்வைக்கு...

சமீப காலங்களில் சென்னையில் அதீத வளர்ச்சியடைந்த பகுதிகளில் வேளச்சேரியும் ஒன்று.

நான் அயல்நாட்டில் இருந்த சமயத்தில் தனிமையான நேரங்களில் இந்தியா ,சென்னை பற்றிய செய்திகள்,படங்கள் பார்க்க வேண்டும் போல இருக்கும்.அப்படி பார்க்க நினைப்பவர்களுக்கு ,இணையத்தில் பார்ப்பதற்கு ஏதாவது ஒரு தளம் வேண்டும் என்று பல சமயங்களில் யோசித்ததுண்டு.
இந்தியா வந்த பிறகு இப்படி பல இடங்களுக்கு சென்று படங்கள் எடுத்து இணையத்தில் வலையேற்ற வேண்டும் என்று நினைத்ததுண்டு.அந்த எண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை!
மேலும் இது போன்று படங்கள் எடுத்தால் கண்டிப்பாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்... :)


விஜயநகரில் இருந்து குருநானக் காலேஜ் வரை இருக்கும் சாலை. வேளச்சேரி பைபாஸ் சாலை என்று சொல்கிறார்கள்!! ஒரு காலத்தில் இங்கிட்டு மிகச்சிறிய சாலை தான் இருக்கும்(அதுக்கும் முன்னாடி ஒன்னுமே இருக்காது,ஆனா அது வேற விஷயம்).ஆனால் இப்பொழுது நல்ல அகலமான மற்றும் தரமான சாலையாக மாறியிருக்கிறது.இந்த சாலையில் ஒரு சில பேருந்து வழித்தடங்கள் மட்டுமே செல்கின்றன.ஆனால் மற்ற வாகனங்கள் இதில் செல்வதால் வேளச்சேரி மெயின்ரோடில் பெருமளவு நெரிசல் குறைக்கப்படுகிறது.வாகன ஓட்டுனர்களுக்கும்,குறுகலான வேளச்சேரி மெயின் ரோடில் போவதற்கு பதில் ,நல்ல அகலமான இந்த சாலையில் போவது நிம்மதியாக இருக்கிறது.


இது வேளச்சேரி மேம்பாலம்.கீழே வேளச்சேரியில் இருந்து புனித தோமையார் மலை வரை ரயில் தண்டவாளங்கள் செல்லும்.இந்த மேம்பாலத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை காணலாம்.இதில் போனால் வண்டி நிறைய ஆட்டம் எடுக்கும் !! பெரிதாக பள்ளம் மேடு இல்லாவிட்டாலும் சாலை சமமாக போடப்படாதடால் இப்படி இருக்கிறது என நினைக்கிறேன்.



வேளச்சேரி ரயில்நிலையம்.இந்த ரயிநிலையம் வந்த பிறகு விரைவு ரயில் திட்டம் சற்றே உபயோகமாகியிருக்கிறது என்று சொல்லலாம்.புனித தோமையார் மலை வரை ரயில்கள் செல்ல ஆரம்பித்தவுடன் இது மேலும் சிறப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் பேருந்துகள் தொடர்பு போன்ற விஷயங்கள் சீரமைத்தால் மேலும் மக்கள் உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பலாம்!! ரயில்களில் தற்போது அவ்வளவாக கூட்டமில்லை என்று நினைக்கிறேன்(தாம்பரம் கடற்கரை இரயில்களோடு ஒப்பிடும்போது)ரயில்களின் கால அட்டவணையை இங்கு பார்க்கலாம்.


வேளச்சேரி மேம்பாலத்தின் இன்னொரு படம்! ஒரு மாதிரி புகை மாதிரி தெரிவது காலைப்பணி அல்ல.இது குப்பைகளை எரிப்பதால் வரும் புகை.இந்தப்பகுதியில் ஆதி முதலாகவே ஒரு குப்பை கொட்டும் கூடம் உண்டு.இங்கே அவ்வப்போது குப்பையை எரித்து விடுவதால் சாலையில் புகை சூழ்ந்துக்கொள்ளும்.இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் சாலையில் போவோரின் உடல்நிலை பாதிப்பு பற்றி அதிகாரிகள் அவசியம் யோசிக்க வேண்டும்.

மேபாலத்தின் இன்னொரு படம்!! பார்ப்பதற்கு நேப்பியர் மேம்பாலம் போல் உள்ளது அல்லவா?? :-)


இது வேளச்சேரி சாலையை ஒட்டியுள்ள சதுப்புநிலப்பகுதி. ஆங்கிலத்தில் Pallikaranai marsh என்று கூறுவார்கள். இங்கு கடல் கடந்து பல அறிய பறவைகள் (migratory birds) வந்து செல்லும்.ஆனால் சுற்றியுள்ள மாற்றங்களைத்தாண்டி இந்த இயற்கை சதுப்புநிலப்பகுதி எத்தனை நாள் தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை.சமீபத்தில் சமூக ஆர்வலர்களின் முயற்சியால் இந்த இடம் பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.

Related Posts Widget for Blogs by LinkWithin