வாழ்க்கையின் சில நேரங்களில், ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தடம் பெயர்ந்து செல்வது போன்ற உணர்வு நம் அனைவருக்கும் ஏற்படுவது வாடிக்கையே.நமது பள்ளிக்கூட படிப்பை முடிக்கும்போது,கல்லூரி வாழ்க்கையை முடிக்கும் போது என்று நம் அனைவருக்குமே இந்த உணர்வுகள் வந்து சென்றுக்கொண்டுதான் இருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முதன் முதலாக வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்ட போது இந்த உணர்வுதான் மேலோங்கி நின்றது.அந்த தருணத்தை உங்களுடன் விலாவாரியாக பகிர்ந்துக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போது என் பணி முடிந்து சென்னைக்கு திரும்பப்போகிறேன் என்றபோது அதே போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.
வருங்காலத்தில் எப்போவாவது என் வாழ்க்கையை நான் திரும்பிப்பார்க்க நேர்ந்தால் இந்த இரண்டு வருடங்கள் தனியாக ஒரு சுவாரஸ்யமான காலக்கட்டமாக திகழும் என்பதில் ஐயமில்லை.நான் தமிழில் பதிவெழுத ஆரம்பித்தது,சமையல் கற்றுக்கொண்டது,முகம் தெரியாத பலநூறு நண்பர்களை கூட்டிக்கொண்டது,தனிமை,வெறுமை,இனிமை,புதுமை,அமைதி என பல வார்த்தைகளுக்கு அர்த்தங்களை விஸ்தரித்துக்கொண்டது என்று பல விஷயங்களை என் வாழ்க்கையில் அறிமுகப்படுத்திய காலம்,இந்த இரண்டு வருடங்கள்.
இவ்வளவு இருந்தும் திரும்பிபோகப்போகிறோம் என்ற பரபரப்பு எதுவும் கடைசி வரை ஏற்படாதது தான் வியப்பு.இங்கு வரும்போது எனக்கு இருந்த பரபரப்பு,விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் ஒரு புது பள்ளிக்கூடம் சேரும் சிறுவனுக்கு இருக்கும் படபடப்பை விட எந்த அளவும் குறைந்தது அல்ல.புது மனிதர்கள்,புது தட்பவெட்பம்,புது வழக்கங்கள் என புதிதான ஒரு வாழ்க்கையை வாழப்போகிறோம் என்ற எதிர்ப்பார்ப்பே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.ஆனால் இப்பொழுது அப்படி எந்த விதமான உற்சாகமும் இல்லை.அடுத்த வேளைக்கு என்ன சாப்பாடு என்று கவலை கொள்ள வேண்டாம்,அதான் அம்மா இருக்காங்களே ,என்ற நிம்மதி மட்டுமே மனதில் மேலோங்கி இருக்கிறது.
"சோறு போட தாயிருக்கா,பட்டினியை பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோவிலுக்கு போனதில்ல"
என்ற திரைப்பாடல் வரிகள் தான் மனதில் தோன்றி மறைகின்றன.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
இப்படி மகிழ்ச்சி சோகம் எதுவுமில்லாமல் ஒரிவிதமான அமைதியான மனநிலையுடனே எனது பயணத்தை தொடங்கினேன். கிளம்புபோது எடுத்துக்கொண்டிருக்கும் மூட்டையினால்(luggage) பிரச்சினை வருமோ என்று மட்டுமே சிறிய கலக்கம் இருந்தது. சொல்லி வைத்தார்போல் எனது carry on baggage பெரியதாக உள்ளது என்று ஒரு சிறிய பிரச்சினை தோன்றி மறைந்தது. .நான் செக் இன் செய்ய வரிசையில் நின்றுக்கொண்டிருக்கும் போதே,எனக்கு முன்னால் இருந்த பிரயாணிகள் அனைவருக்கும் இந்த பை பெரியதாக இருக்கிறது,இதை செக் இன் செய்துவிடுங்கள் என்று எல்லா carry on luggage -க்கும் விமான நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.இதை பார்த்த வுடன் எனக்கு பயமாகி விட்டது.ஏனென்றால் எனது carry on luggage-இல் என்னுடைய எஸ் எல் ஆர் கேமரா(லென்ஸ்களுடன்) மற்றும் கேம்கார்டர் ஒன்றும் இருந்தது.இதை நான் செக் இன் செய்யப்போக,சிங்கம்லே ஏஸ் அண்ணாச்சிக்கு ஆகியது போல் எனக்கும் ஆகிவிடுமோ என்று கிலி தொற்றிக்கொண்டது.
உடனே வரிசையில் இருந்துக்கொண்டே நான் கூட கொண்டு வந்திருந்த laptop backpack-இல் கேமரா பையை திணித்து,carry on luggage-இல் கேமரா மற்றும் லென்ஸ்களை தனியாக பொருத்தி சற்றே damage control செய்ய முனைந்துவிட்டேன்.கடைசியாக என்னுடைய முறை வரும்போது லேப்டாப் பேக் சற்றே வீங்கிக்கொண்டு நிற்க,carry on luggae பெரியதாக ஒன்றும் அளவு குறையாமல்,ஒரு விதமான ரெண்டாம்கெட்டான் நிலையில் இருந்தது.
வழக்கமாக எடுத்துச்செல்லும் carry on பைதான் இது என்றாலும் நான் சென்ற Lufthansa விமான நிறுவனத்தில் மிகவும் கறாராக இந்த சிறியப்பெட்டியை செக் இன் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
எனக்கோ என் கேமராவை விட்டுப்பிரிய மனதில்லை.உடனே அங்கே பக்கத்தில் இருந்த ஒரு அளவுகோலில் என் பையை பொருந்தி,"பார்த்தீர்களா! உங்கள் அளவுகோலிற்கு உட்பட்டுதான் இந்தப்பை இருக்கிறது" என்று பூசி மெழுகி ஒரு வழியாக செக் இன் செய்யாமல் தப்பித்தேன்.அவர்களும் அறைமனதோடு ஒத்துக்கொண்டார்கள்!!கடைசி வரை சற்றே பிதுங்கிக்கொண்டிருந்த எனது laptop backpack-ஐ அவர்கள் கண்டுக்கொள்ளாதது ஆச்சரியமே!
அதை முடித்து செக்யூரிடி செக் செய்யுமிடத்திற்கு வந்தால்,என்னை பார்த்துவிட்டு உனக்கு சிறப்பான செக்கிங் செய்ய வேண்டும் என்று தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள்! அடப்பாவிகளா என்னை பார்த்தால் தீவிரவாதி போலவா இருக்கிறது?? நான் என்னமோ பால் வடியும் முகம் என்றெல்லாம் என்னை பற்றி பதிவெழுதிக்கொண்டிருக்கிறேன்,என்று நினைத்துக்கொண்டேன். பிறகு என் பைகளை எல்லாம் சோதனை செய்துவிட்டு,"ஐயா! உங்கள் பையில் சந்தேகத்திற்கிடமாக ஒன்றும் இல்லை,நீங்கள் செல்லலாம்! சிரமத்திற்கு மன்னிக்கவும்" என்று போகவிட்டார்கள்!!
"அதான் நான் அப்போவே சொன்னேனே!! இப்படி வெளையாடுறதே உங்களுக்கு எல்லாம் வழக்கமா போச்சு!! ஒரே விஷமம்" என்று விளையாட்டாய் கடிந்துகொள்ள நினைத்து,ஆனால் சொல்லாமல் விட்டேன்.வீடு வந்து சேர வேண்டும் அல்லவா!!
டிட்ராய்ட்டில் இருந்து சற்றே தாமதமாக கிளம்பிய விமானம் எந்த வித பெரிய களேபரமும் இன்றி இனிதாக ஃபிராங்ஃபர்ட் வந்து இறங்கியது.
இந்த பயணத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,விமானப்பணிப்'பெண்'ணாக (?!) இருந்த ஒரு ஜெர்மன் "பாட்டி"யை பற்றி சொல்லியாக வேண்டும்.பயணம் நெடுக்க என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்!! அதாவது வேளாவேளைக்கு சரியாக சாப்பாடு தந்தார் !!
நீங்கள் வேறெதுவும் நினைத்துக்கொள்ள வேண்டாம்!! எனக்கு சைவ உணவு தான் கட்டாயமாக தேவை என்று கூறியிருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரத்தியேகமாக சிறப்பு சைவ உணவு கொடுத்தார்! (சைவ உணவு கேட்கும் எல்லோருக்கும் அப்படித்தான் தருவார்கள் என்பது வேறு விஷயம்.)
கடைசியில் இறங்கும்போது,"நீங்கள் சென்னை செல்கிறீர்களா?? எனக்கு இந்தியாவில் மிகவும் பிடித்தமான நகரம் சென்னை தான்,கடந்த பிப்ரவரி கூட பாண்டிச்சேரியில் விடுமுறைக்காக வந்திருந்தேன்"என்றெல்லாம் சொல்லி என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டார்.அப்படியே அவரிடம் மொக்கை போட்டு விட்டு விமானத்தில் இருந்து இறங்கினேன்.அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன்!! (ரொம்ப முக்கியம்....)
ஃபிராங்ஃப்ர்ட்டில் இருந்து சென்னைக்கான விமானம் சுமார் 11 மணிக்கு மேல் என்று பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது,அதே சற்றே முன்பாக 10:15-க்கு கிளம்பும் என்று டிட்ராய்ட்டில் கொடுத்த boarding pass-இல் போட்டிருந்தார்கள்.இப்படியிருக்க நாங்கள்(நான் மற்றும் எனது நண்பர்) ஃப்ராங்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கியபோது மணி 6:30-7:00 தான் இருக்கும். இறங்கிவிட்டு நேராக எங்கள் போர்டிங் பாஸில் குறிப்பிட்டிருந்த கேட் B42-க்கு சென்று விட்டோம்!! அங்கே சென்றால் எங்கள் விமானம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.சரி நேரம் தான் இருக்கிறதே என்று என் நண்பர் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்,நான் இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன்!! நடுவில் காபி குடிக்கலாம் என்று கிளம்பி ஒரு இடத்தில் காபி வாங்க அது விஷக்கசப்பாய் வாயிலேயே வைக்க முடியவில்லை!! எவ்வளவு சர்க்கரை போட்டாலும் சரிப்படவில்லை.பாதி குடித்து,மீதியை தூர எறிந்ததுதான் மிச்சம்.
இதற்கு மேல் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால் விமானம் பற்றி தகவல் அறிய வெளியே கிளம்பினேன்.அப்பொழுது எங்கள் விமானம் கேட் B28-க்கு மாற்றிவிட்டதாக அறிவித்தனர்."என்னங்கடா இது,ரயில்வே ப்ளாட்பார்ம் மாத்தறா மாதிரி கேட்டு மாத்தறாங்க"என்று விமர்சனம் செய்துக்கொண்டு கேட் B28-க்கு வந்து சேர்ந்தோம்.
அதன் பிறகு பயணத்தில் பெரியதாக ஒன்றும் நிகழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஃப்ராங்ஃபர்ட்டில் மீதி நேரத்தில் ஒரு சுட்டிப்பெண்ணின் வால்தனத்தை ரசித்துக்கொண்டே போக்கி விட்டேன்!! "ரொம்ப வால்தனம் பண்ணா அந்த மாமா உன்னை அடிப்பாரு" என்று அந்த குழந்தையின் அம்மா என்னை சுட்டிக்காட்டி டேமேஜ் செய்தார்! விமானத்தில் சிறிது தூங்கி,சற்றே படம் பாத்து,பாட்டு கேட்டு என்று இருப்பு கொள்ளாமல் பயண நேரத்தை ஓட்டிவிட்டேன்.
இறங்கி இம்மிக்ரேஷன் கஸ்டம்ஸ் என்று முடிந்து வெளியே வர 1:30 ஆகிவிட்டது!!!
அடுத்த நாளே நம்ம ஜிரா அண்ணாச்சியை சந்தித்து மகிழ்ந்தாகிவிட்டது!! ஒரு விதமான தொடக்கம்/முடிவு நிலையில் இருப்பது போன்ற ஒரு மனநிலை படர்கிறது! பழைய ப்ராஜெக்ட் முடிந்து ,புது பிராஜெக்ட்,புது மேலாளர்,புது வேலை நண்பர்கள்..... இப்படி பலவும் மாறப்போவதால் என் மனதில் இப்படி தோன்றுகிறது என்று எண்ணுகிறேன்.
மாறுதல்களோடு புரிதல்களும் ஏண்ணங்களும் எழுத்துக்களும் ஆக்கங்களும் ,இவற்றோடு வாழ்க்கையும்....... LIfe goes on.
இதை ஒரு சுவையான பதிவாக எழுத முயற்சிக்காமல்,என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வின் பதிவாக,நண்பர்களுக்கு பகிர்வதற்காக மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டேன்.மொக்கையாக இருந்தால் மன்னிக்கவும்!!
போன மச்சான் திரும்ப வந்தான்
Labels:
நிகழ்வு
Subscribe to:
Posts (Atom)