சென்னையின் மென்மையான வானில் படர்ந்திருந்த பிஞ்சுப்பஞ்சு மேகங்களை இறக்கமில்லாமல் கிழித்துக்கொண்டு விமானம் எண் 0468 மும்பையை நோக்கி விரைந்துக்கொண்டு இருந்தது. விமானம் விபத்துக்குள்ளானால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை விமான சிப்பந்தி ஒருவர் செய்து காட்டினார் பின் அவ்வப்போது குளிர்பானம் மற்றும் தின்பண்டங்கள் வேண்டுமா என்று பணிப்பெண்கள் கேட்டு கொண்டிருந்தார்கள், இது தவிர பயணம் பெரும்பாலும் அமைதியாகவே கழிந்தது. பிரயாணக்காலம் முழுதும் மும்பை சென்ற வுடன் அங்கு என்ன செய்வேனோ என்று கவலை மட்டும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருந்தது. மும்பையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டங்கள் பல உண்டு என்று அரசல் புரசலாக அவ்வப்போது கேள்விப்பட்ட சமாசாரங்கள் வேறு வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தன. மும்பையை சேர்ந்த ஒரு ஆங்கில நாளிதழில் லதா மங்கேஷ்கரும் அவர் வீட்டு பக்கம் கட்ட திட்டமிடப்பட்ட மேம்பாலச்சாலை பற்றியும் சிறிது நேரம் படித்து கொண்டிருந்தேன்,ஆனால் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. சுவாரஸ்யமாக இருந்தாலும் படிக்கும் மன நிலையில் நான் அப்பொழுது இல்லை! ஜன்னல் வழியாக அவ்வப்போது பக்கத்திலிருக்கும் நபரின் அசைவுக்கு ஏற்ப சிறிதும் பெரிதுமாக வேடிக்கை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டு இருந்தது!
இப்படியாக ஒரு ஒன்றரை மணி நேரம் ஐந்து நிமிடங்களாய் கழிந்தது!!
அப்பொழுது காற்றை விரட்டி விட்டு மெல்லப்பூக்கும் ஒரு பூவைப்போல இருட்டை விரட்டி விட்டு தன் ஒளிமயமான விளக்குகளால் கீழே படர்ந்து கொண்டிருந்தது மும்பை மாநகரம்.
விமானம் மேலே எறுதல் ஒரு உற்சாக வேட்கை என்றால் , கீழே இறங்குதல் அதைபோன்றே இருந்தாலும் சிறிது வித்தியாசமான ஒரு விருந்து. கீழே இறங்கையிலே கூட,இறங்கியவுடன் எங்கு செல்வேன், யாரை பார்ப்பேன் ,என்ன செய்வேன் என்று அலை பாய்ந்த என் மனதை கட்டிப்போட முடியவில்லை.
ஒரு வழியாக கீழே இறங்கியவுடன், ஜெட் விமான நிறுவனத்தின் பேருந்து ஒன்று என்னை ஏத்திக்கொண்டு விமான நிலையத்தில் விட்டு சென்றது!
சரி! விமான நிலையத்தில் இறங்கியாகிவிட்டது!! இப்பொழுது என்ன செய்யலாம்???
ஒன்றுமே புரியவில்லை!!!
கோட்டு சூட்டு எல்லாம் போட்டுக்கொண்டு பேக்கு மாதிரி திரு திரு வென முழித்தால் கேவலமாக இருக்கும் என்பதால் ஏதொ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல விடு விடு என்று வாசல் பக்கம் நடக்க ஆரம்பித்தேன்!! 
“ஹோட்டல் வேணுமா சார்?”,”எங்க சார் தங்க போரீங்க சார்?”,”டாக்சி கூப்பிடட்டுமா சார்!!!” என்று எங்கிருந்தோ முளைத்த யார் யாரோ குசலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்!!
ஆனால் மும்பையிலேயே பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து ஆண்ட மிராசுதாரை மாதிரி நான் பாட்டுக்கு யாரையும் கவனிக்காமல் நேரே சென்றுகொண்டு இருந்தேன்!!
அரங்கை விட்டு வெளியே சென்ற பிறகுதான் யாரையாவது எதையாவது கேட்க வேண்டும் என்று தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நேராக ஜெட் விமான நிறுவனத்தின் சேவை முகப்பிற்கு சென்று தத்து பித்தென்று ஏதோ ஆங்கிலத்தில் உளறினேன்!!! வாழ்க்கையில் ஆங்கிலத்தையே கேட்காதது போன்ற ஒரு பார்வையை உதிர்த்து விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஒரு சிப்பந்தியை அழைத்தான் அங்கு இருந்த ஒரு பணியாளி.
என் போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட் வகையறாக்களை பார்த்து விட்டு, “இதற்க்கு ஏன் இவ்வளவு அமர்க்களம் செய்கிறாய்?” என்று பார்வையாலயே கேட்டுவிட்டு,உள்ளே இருக்கும் நார்த்வெஸ்ட் முகப்பிற்கு செல்லுமாறு அந்த சிப்பந்தி அறிவுருத்தினான்.
போர்டிங் பாஸை காட்டி விமான நிலைய அரங்கிற்குள் திரும்பவும் சென்றேன்..
உள்ளே சென்றதும் நார்த்வெஸ்ட் முகப்பு எங்கே இருக்கிறது என்று இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
“தாங்கள் தான் சென்னையில் இருந்து வந்த சக்ரவர்த்தியா??” என்ற குரல் கேட்டு திரும்பினேன்.
திரும்பி பார்த்தால் நார்த்வெஸ்ட் பேட்ஜ் அணிந்த குட்டையான சிறிது குண்டான ஒரு ஆசாமி தன் கையில் இருந்த பட்டியலை பார்த்துக்கொண்டே வினவிக்கொண்டு இருந்தான்.
சக்ரவர்த்தி வரதன் ராமானுஜம் என்ற என்னுடைய முழு பெயர் பல இடங்களில் பல விதமாய் அழைக்கப்பட்டு பழகியிருந்ததால் என்னை தான் இவன் தேடிக்கொண்டிருக்கிறான் என்று உணர்ந்து கொண்டு “யெஸ்!” என்று மறுமொழி அளித்தேன்.
என்னுடைய பயணப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு அந்த அறையின் வடமேற்கு மூலைக்கு செல்லுமாறு அவன் கூறினான். சரி என்று அவன் சொன்ன படியே செய்தேன்.
அங்கு இருந்த ஒரு விமான நிலைய சிப்பந்தி என் பாஸ்போர்ட் மற்றும் என் நிறுவனத்திடமிருந்து நான் பெற்ற சில ஆவணங்களை சரி பார்த்தான். பின்பு “உங்கள் பெட்டியை நீங்களே அடுக்கினீர்களா??”, “விமான நிலையத்தில் இருக்கும்போது யாரிடமேனும் எதாவது பை அல்லது பொருட்கள் வாங்கினீர்களா?” என்று பேருக்கு சில கேள்விகளை கேட்டு வைத்தான். 
பின் என்னிடம் “embarkment-disembarkment” எனப்படும் ஒரு படிவத்தை கொடுத்துவிட்டு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கு முன் இதை நிரப்பிவிட்டு தர வேண்டும் என்று கூறினான். அது என்ன படிவம் ,அதை எப்படி நிரப்ப வேண்டும் என்று மேலும் கீழேயும் பார்த்து கொண்டே அந்த அரங்கை விட்டு வெளியேறினேன்.
மும்பையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு இடையே ஒரு நான்கைந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் என நினைக்கிறேன். இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையே செல்வதற்கு இலவச பேருந்து வசதியும் உண்டு.
அந்த பேருந்துக்கு காத்துக்கொண்டு இருந்த போது இந்தியாவின் ந்யூயார்க் என்று சொல்லும் அளவுக்கு தொழில்வளமும் வேகமும் கொண்ட மும்பை நகரத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது! சரி பார்த்துக்கலாம்,நம்ம இந்தியா தானே என்று மனதை தேற்றிக்கொண்டேன் . ஒரு இருபது நிமிடம் காத்திருந்த பின் வந்த பேருந்து என்னை ஏற்றிக்கொண்டு சர்வதேச விமான நிலையத்தில் விட்டு சென்றது.
அங்கு நார்த்வெஸ்ட் சேவை முகப்பை தேடிக்கண்டுப்பிடித்தேன். அங்கு இருந்த கண்ணாடி போட்ட இளம் பெண் என் போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட் அகியவற்றை வாங்கி கொண்டு எனை சிறிது நேரம் உற்று உற்று பார்த்துக்கொண்டிருந்தாள். பாஸ்போர்ட்டில் உள்ளது என் முகம்தானா என்பதை சரிபார்க்கத்தான் அப்படி பார்த்து கொண்டிருந்தாள் என்பதை நீங்கள் ஒன்றும் சொல்லாமலேயே எனக்கு தெரியும்!!
பிறகு என் “embarkment-disembarkment” படிவத்தை நிரப்பிக்கொண்டு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு சிப்பந்தியின் முன் போய் நின்றேன்!!
சிறிது நேரம் இங்கும் அங்கும் ஏதோ முத்திரை குத்தி விட்டு அவன் என்னை பார்த்து கேட்டான்.
“நீங்கள் எந்த நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள்??”
“XXX”
பின் திரும்பவும் ஏதோ தீவிரமாக யோசித்து விட்டு
“உன் நிறுவனத்தின் பங்குகள் இன்னும் எவ்வளவு தான் உயர போகிறது??” என்று சொல்லிக்கொண்டே “embarkment-disembarkment” படிவத்தின் ஒரு பகுதியை கிழித்துக்கொடுத்தான்! அவன் தமாசாக பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதே எனக்கு சிறிது நேரம் கழித்துதான் உறைத்தது!!! மகராசன்!!! ஜோக் சொல்லும்போது கொஞ்சம் சிரித்துக்கொண்டு சொல்ல மாட்டானா??
“போடாங்க!! நீங்களும் உங்க ஜோக்கும்” என சொல்ல நினைத்து கடைசியில் “ஹி ஹி” என்று அல்பத்தனமாக ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு வந்தேன். 
அவன் கிழித்துக்கொடுத்த ஒரு பகுதியை ,இந்தியா திரும்ப வரும்பொழுது கொடுக்க வேண்டுமாம்.அதை என் பையில் பத்திரப்படுத்துக்கொண்டேன்.
இது நடந்து முடிந்த போது மணி இரவு 8:30. ஆனால் என் விமானம் புறப்படும் சமயமோ நள்ளிரவு விடிகாலை 12:50 மணி.
அது வரை என்ன செய்வது???
வீட்டிற்கு தொலைபேசியில் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கே போடப்பட்டிருந்த விசாலமான இருக்கைகளில் சாய்ந்து கொண்டேன்.
நான் வெளிநாடு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வழியனுப்பு விழாவில் எனக்கு ஒரு புத்தகம் பரிசளிக்கப்பட்டிருந்தது. தலையில் பொட்டு முடி கூட முடி இல்லாத GE நிறுவனத்தின் அதிபரின் சுயசரிதையாம்!! நல்ல காலமாக இவர் நடத்திய நிறுவனம் அவர் தலையை போல இல்லாமல் நல்ல புஷ்டியாக வளர்ந்து விட்டதாம்!!
நம் முடியை போல இல்லாமல் அதுவாவது இவ்வளவு நன்றாக வளர்ந்து விட்டதே என்று உணர்ச்சி மேலிட்டு இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் போலும்!!
அதை கொஞ்ச நேரம் இப்படி அப்படியுமாய் புரட்டிக்கொண்டு இருந்தேன், ஒரு பனிரெண்டு மணி வாக்கில் திரும்பவும் ஒரு பாதுகாப்பு சோதனைக்குப்பின் நிறைய இருக்கைகள் போடப்பட்டிருந்த ஒரு அறைக்குள் சென்றேன்.
என் தாய்நாட்டிலிருந்து நீங்கி செல்லக்கூடிய தருணம் வரப்போகிறது எனும் பரபரப்பான எண்ண ஓட்டத்துடன் காத்திருக்கையில், நாடு திரும்ப பல நாட்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் காலம் வரும் என்பதை நான் உணராமல் இல்லை!!
-ஆன் ஆர்பரிலிருந்து தொடரும்....
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - முன்னுரை
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 1
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 3
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து - பாகம் 2
Labels:
நிகழ்வு,
பயணக்கட்டுரை
Subscribe to:
Posts (Atom)